Home » வாளின் வடிவம்
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

வாளின் வடிவம்

ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்
ஆங்கிலத்தில்: Donald A. Yates
தமிழில்: பிரம்மராஜன்


ஒரு வன்மம்மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது. ஒரு முனையில் அவனது நெற்றிப் பொட்டுக்கும் மற்றொன்றில் கன்னத்துக்குமாக சுருக்கங்கள் ஏற்படுத்திய அது ஏறத்தாழ முழுமையடைந்த அரைவட்டமாகவும் சாம்பல் நிறத்திலும் இருந்தது. அவனுடைய உண்மையான ‘பெயர்’ முக்கியமல்ல: டக்வாரெம்போவில் இருந்த எல்லோரும் அவனை கொலோராடாவிலிருந்து வந்த ஆங்கிலேயன் என்று அழைத்தார்கள். அந்த வயல்களின் சொந்தக்காரனான கார்டோசோ அவற்றை விற்க மறுத்தான்: எதிர்பார்த்திராத ஒரு விவாதத்திற்கு அந்த ஆங்கிலேயன் இட்டுச் சென்றிருக்க வேண்டும்: அவன் கார்டோசோவிடம் தன் வடுவின் ரகசியத்தைக் கூறியிருக்க வேண்டும். ரியோ கிராண்ட் டெல்சுர் என்ற பகுதியின் எல்லைப்புறத்திலிருந்து அந்த ஆங்கிலேயன் வந்தான். அவன் ஒரு கடத்தல்காரனாக பிரேஸிலில் இருந்தவன் என்று சொல்பவர்கள் நிறையபேர் இருந்தார்கள். அந்த வயல்கள் புல் மண்டிக்கிடந்தன. நீர்ச் சுனைகள் உப்புக்கரித்தன.

இந்தக் குறைபாடுகளை சரியாக்கும் பொருட்டு அந்த ஆங்கிலேயன் நாள் முழுவதும் தன் வேலையாட்களைப் போலவே கடினமாக உழைத்தான். கருணையின்மையின் எல்லைக்கு அவன் கண்டிப்பானவன் என்றும் துல்லியமான நியாயவாதி என்றும் அவனைப் பற்றிச் சொன்னார்கள்: ஒரு வருடத்தின் சில சமயங்களில் தன்னை ஒரு மாடி அறையில் வைத்துப் பூட்டிக்கொண்டான். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒரு போரிலிருந்தோ, ஒரு தலை சுற்றலில் இருந்தோ வெளிப்படுவதுபோல வெளுத்துப்போய், நடுங்கியபடி, குழம்பிப்போய் ஆனால் முன்பைவிட அடக்கி ஆள்பவனாக அவன் வெளிப்பட்டான். அந்தக் கண்ணாடிபோன்ற கண்கள், சக்திமிக்க மெல்லிய உடல், மற்றும் நரைத்துப்போன மீசை ஆகியவை எனக்கு ஞாபகம் வருகின்றன. அவன் எவரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவன் பேசிய ஸ்பானிய மொழி மிக அரிச்சுவடித்தனமானதும் ப்ரேஸீல் மொழிக்கலப்பு மிக்கது என்பதுவும் உண்மை. ஏதாவது ஒரு துண்டுப் பிரசுரம் அல்லது வியாபார சம்பந்தமான ஒரு கடிதம் தவிர அவனுக்கு எந்தக் கடிதங்களும் வருவதில்லை. வடக்குப் பிராந்தியங்கள் வழியாக நான் சென்றமுறை கடந்து சென்றபோது கரகொத்தா நதியின் எதிர்பாராத பொங்கி வழிதல் என்னை ஒரு இரவு கொலோராவில் தங்கும்படி கட்டாயப்படுத்தியது. சில நொடிகளுக்குள் என் வரவு அங்கு சமயப்பொறுத்தமற்றுப் போனதை என்னால் உணர முடிந்தது.

என்னை அந்த ஆங்கிலேயனுக்கு உவப்பாக்கிக்கொள்ள முயன்றேன். சிறிதும் பகுத்து அறிதல் அற்ற பற்றுக்களில் ஒன்றை நான் பயன்படுத்தினேன்: தேசப்பற்று. இங்கிலாந்து போன்ற வெல்லமுடியாத உணர்வுடைய ஒரு நாட்டினை என்னுடையதாகக் கூறினேன். என் நண்பன் ஒப்புக்கொண்டு ஒரு புன்முறுவலுடன் ஆனால் தான் ஒரு ஆங்கிலேயன் இல்லை என்றான். அவன் அயர்லாந்தில் டங்கர்வான் பகுதியைச் சேர்ந்தவன். இதைக் கூறிய பிறகு, அவன் ஏதோ ஒரு ரகசியத்தை வெளிப்படுத்திவிட்டதுபோல திடீரென்று நிறுத்தினான். இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் வானத்தைப் பார்க்க வெளியே சென்றோம். வானம் தெளிவாகி இருந்தது. ஆனால் தாழ்ந்த மலைகளுக்கு அப்பால் தெற்கு வானம் மின்னலால் கோடிடப்பட்டு, ஆழ்ந்து பிளக்கப்பட்டு, இன்னொரு புயலை கருக்கொண்டபடி இருந்தது. சுத்தம் செய்யப்பட்ட உணவருந்தும் அறையில், இரவு உணவு பரிமாறிய பையன் ஒரு பாட்டில் ரம் கொண்டுவந்து வைத்தான். சிறிது நேரம் நாங்கள் மௌனமாக அருந்தினோம். எனக்கு போதை ஏறிவிட்டதை நான் உணர்ந்தபோது என்ன நேரம் என்று தெரியவில்லை. என்னுடைய புத்துணர்ச்சியா, அல்லது சோர்வா, அல்லது பெருமகிழ்ச்சியா, எது அந்த வடுவைப் பற்றிக் குறிப்பிடச்செய்தது என்று தெரியவில்லை. ஆங்கிலேயனின் முகம் மாறுதல் அடைந்தது. அவன் என்னை வீட்டைவிட்டு வெளியே தள்ளப்போகிறான் என்று சில வினாடிகள் நினைத்தேன். விளக்கமாக, தன் சாதாரண குரலில் அவன் கூறினான்:

“என் வடுவைப் பற்றிய வரலாற்றை ஒரு நிபந்தனையின்பேரில் நான் சொல்கிறேன்: அந்த பெரும் அவமானத்தை, இழிவான சந்தர்ப்பங்களின் தீவிரத்தை சற்றும் குறைக்கப் போவதில்லை.”

நான் ஒப்புக்கொண்டேன். அவனுடய ஆங்கிலத்தில் ஸ்பானிய மொழியையும், போர்ச்சுகீசிய மொழியையும் கலந்து அவன் சொன்ன கதை இதுதான்:

“கிட்டதட்ட 1922ஆம் வருடம், கன்னாட் நகரங்களில் ஒன்றில், அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்த பலரில் நானும் ஒருவன். என்னுடைய தோழர்களில் சிலர் தங்களை அமைதியான காரியங்களில் ஈடுபடுத்தியபடி இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்: மற்றவர்கள், புரிந்துகொள்ள முடியாத வகையில் பாலைவனத்திலும் கடலிலும் ஆங்கிலக்கொடியின் கீழ் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; மிகவும் தகுதிவாய்ந்த மற்றொருவன் விடியல் நேரத்தில், ராணுவ வீரர்களின் குடியிருப்பு முற்றத்தில், தூக்கம் நிரம்பிய மனிதர்களால் சுடப்பட்டு இறந்தான். இன்னும் பலர் (மிகவும் அதிர்ஷ்டமற்றவர்கள் அல்ல) பெயரற்ற, உள்நாட்டுப் போரின் ரகசிய மோதல்களில் தங்கள் முடிவுகளை’ எதிர்கொண்டனர். நாங்கள் ரிபப்ளிக்கர்கள். நாங்கள் தேசீயவாதிகள்; கத்தோலிக்கர்கள்; நாங்கள் ரொமாண்டிக்குகள் என்று கூட சந்தேகப்படுகிறேன். அயர்லாந்து எங்களுக்கு நிறைவேற்றம் காணமுடியாத எதிர்காலமாக மட்டுமின்றி பொறுத்துக்கொள்ளமுடியாத நிகழ்காலமாகவும் இருந்தது. அது ஒரு கசப்பான, போற்றிப் பாதுகாத்த புராணிகம்; அது வட்ட வடிவக் கோபுரங்களாகவும் சிவப்பு சதுப்பு நிலங்களாகவும் இருந்தது. பார்னலின் மறுதலிப்பாக இருந்தது. மாபெரும் காவியப் பாடல்களாக அவை காளைகளைக் களவாடிய நிகழ்வுகளைப் பாடின. இவை இன்னொரு பிறவியில் நாயகர்களாகவும் மற்றும் சிலவற்றில் மீன்களாகவும், மலைகளாகவும்… ஒருநாள் மதியம், நான் என்றுமே மறக்கமாட்டேன். மன்ஸ்டர் நகரத்திலிருந்து வந்த கூட்டாளி எங்களுடன் சேர்ந்தான்: ஜான் வின்சென்ட் மூன் என்ற ஒருவன். அவன் இருபது வயது நிரம்பாதவன். அவன் ஒரே சமயத்தில் மெலிந்தும், தொங்கும் சதைப்பற்று உடலுடனும்காணப்பட்டான்; முதுகெலும்பு இல்லாத பிராணி ஒன்றினைப்போல அசௌகரியமான மனப்பதிவை ஏற்படுத்தினான். அவன் தீவிரத்துடனும், தற்பெருமையுடனும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்திருந்தான் கடவுளுக்குத்தான் தெரியும் என்னவிதமான கம்யூனிஸ்ட் புத்தகங்கள் என்று. எவ்விதமான விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அவன் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தைப் பயன்படுத்தினான். ஒருவன் மற்ற மனிதனை வெறுப்பதற்கு அல்லது விரும்புவதற்கு எல்லையற்ற காரணங்கள் கொண்டிருக்கலாம்: மூன் பிரபஞ்சத்தின் வரலாற்றையே ஒரு மிக மோசமான பொருளாதார முரண்பாட்டுக்கு சுருக்கினான். புரட்சியானது வெற்றி அடையும்படி முன் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூறினான். ஒரு கனவானுக்கு இழந்துபோன நோக்குகள் மட்டுமே கவர்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்று நான் அவனிடம் சொன்னேன். இரவு ஏற்கனவே கவிந்துவிட்டிருந்தது; எங்களுடைய கருத்துமாறுபாடுகளை, கூடத்தில், மாடிப்படிகளில், தெளிவில்லாத தெருக்களில் தொடர்ந்தோம். அவன் வெளிப்படுத்திய தீர்மானங்களை விட அவற்றின் மறுக்க இயலாத, நிறுவப்பட்ட தன்மையே என்னைக் கவர்ந்தது. புதிய தோழன் விவாதிக்கவில்லை. உதாசீனத்துடனும் வெறுப்புடனும் தன் கருத்துக்களைக் கட்டளைத்தொனியில் ஆணையாகத் தெரிவித்தான்.

வெளிப்பகுதியில் அமைந்திருந்த வீடுகளை நெருங்கும்போது, திடீரென்று கிளம்பிய துப்பாக்கிச் சத்தம் எங்களை ஸ்தம்பிக்கவைத்தது. (இதற்கு முன்பு அல்லது பிறகு ஒரு தொழிற்சாலையின் வெற்றுச் சுவரையோ அல்லது ராணுவ வீரர்களின் குடியிருப்பையோ சுற்றிவந்தோம்) கற்கள் பாவப்படாத ஒரு தெருவில் நுழைந்தோம்; பற்றி எரியும் குடிசை ஒன்றிலிருந்து, நெருப்பு வெளிச்சத்தில் பூதாகரமாய்த் தெரிந்த ஒரு ராணுவ வீரன் வெளிப்பட்டான். உரக்கக் கத்தியபடி, எங்களை நிற்கச்சொல்லி உத்தரவிட்டான். என் நடையை துரிதமாக்கினேன்; என் தோழன் கூட வரவில்லை. நான் திரும்பினேன்: ஜான் வின்சென்ட் மூன் பயத்தினால் நித்தியப்படுத்தப்பட்டவன் போல ஈர்க்கப்பட்டு அசைவற்று நின்றான். நான் பின்னால் திரும்பி ஓடி ராணுவ வீரனை ஒரே அடியில் கீழே தள்ளி, வின்சென்ட் மூனை அவமானப்படுத்தி, என்னைத் தொடர்ந்து வர உத்தரவிட்டேன். நான் அவன் கையைப் பிடித்து இழுத்துச்செல்ல வேண்டியதாயிற்று; பயம் என்ற உணர்ச்சி அவனை ஏதும் செய்ய இயலாதவனாக்கி விட்டிருக்கிறது. ஒளிப் பிழம்புகளால் ஊடுருவப்பட்ட இரவின் ஊடாக நாங்கள் தப்பித்தோம். துப்பாக்கிக் குண்டுகள் ஏராளமாய் எங்களை நோக்கியபடி வந்தபோது, அதில் ஒன்று மூனின் வலது தோளைக் காயப்படுத்தியது. பைன் மரங்களுக்கிடையில் நாங்கள் தப்பிச்சென்றபோது அவன் ஒரு பலவீனமான தேம்பலை வெளிப்படுத்தினான்.

1923ஆம் வருடத்தின் இலையுதிர்காலத்தில் நான் ஜெனரல் பார்க்லியின் கிராமத்து வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருந்தேன். (இதுவரை என்றும் நான் பார்த்திராத) அந்த ஜெனரல் நிர்வாகக் காரியமாற்றுவதற்கோ அல்லது வேறு எதற்கோ பெங்கால் சென்றிருந்தார்; அந்த வீட்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் குறைவாகத்தான் வயதாகியிருக்கும். ஆனால் அது சிதைலமடைந்தும் நிழல் நிரம்பியும் இருந்தது. புரிபடாத வராந்தாக்களிலும் அர்த்தமற்ற பின்கூடங்களிலும் அது விரிவடைந்திருந்தது. காட்சிக் கூடமும், மாபெரும் நூலகமும் முதல் தளத்தை ஆக்கிரமித்திருந்தன.

சர்ச்சை மிகுந்த, உவப்பில்லாத புத்தகங்கள் அவை ஒரு வகையில் 19ஆம் நூற்றாண்டின் வரலாறாக இருந்தன; நிஷாபூரின் அகன்றமுனைக் கொடுவாள்கள் அவற்றின் உறைந்த வளைவுகளில் இன்னும் போரின் வன்முறையும் காற்றும் நிலைத்திருப்பது மாதிரியாகத் தோன்றியது. நாங்கள் பின்பக்கத்திலிருந்து (நான் நினைவுகொள்வது மாதிரி) நுழைந்தோம். மூன் நடுங்கியபடி, வாய் உலர்ந்து, அந்த இரவின் நடப்புகள் சுவாரஸ்யமானதென்று முணுமுணுத்தான்; நான் அவனது காயத்திற்குக் கட்டுப்போட்ட பின் ஒரு கோப்பை தேநீர் கொண்டுவந்தேன்: என்னால் அவனின் “காயம்” மேலோட்டமானது என்று தீர்மானிக்கமுடிந்தது. குழம்பிய நிலையில் அவன் திடீரென்று உளறினான்:

“உனக்குத் தெரியுமா நீ ஈடுபட்டது மிக ஆபத்தான காரியம் “அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம் என்று நான் அவனுக்குச் சொன்னேன். (உள்நாட்டுப்போரின் பழக்கம், நான் எவ்வாறு இயங்க விரும்பினேனோ அவ்வாறு செயல்படத் தூண்டியது; மேலும் ஒரு நபர் பிடிபட்டாலும் கூட எங்கள் நோக்கத்திற்கு ஆபத்து ஏற்படும்).

“அடுத்த நாள் மூன் தன் நிதானத்தை அடைந்திருந்தான். ஒரு சிகரெட்டை ஏற்றுக் கொண்டு “நம் புரட்சிகர கட்சியின் பொருளாதார வழிமுறைகள்” குறித்து என்னை ஒரு கடுமையான விசாரணைக்கு ஆளாக்கினான். அவன் கேள்விகள் மிகத் தெளிவாய் இருந்தன: நான் (உள்ளபடி) நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினேன். ஆழ்ந்த துப்பாக்கி வெடி ஓசைகள் தெற்கைக் குலுக்கின. நம் தோழர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள் என்று மூனிடம் சொன்னேன். என்னுடைய மேல்கோட்டும் கைத்துப்பாக்கியும் என் அறையில் இருந்தன; நான் திரும்பியபோது மூன் கண்களை மூடியபடி சோபாவில் நீட்டிப் படுத்திருப்பதைப் பார்த்தேன். அவனுக்குக் காய்ச்சல் என்று அவன் கற்பனை செய்துகொண்டான். வலிமிக்க துடிப்பு ஒன்றினைத் தன் தோளில் அவன் வரவழைத்துக் கொண்டான்.

அந்த கணத்தில் அவனின் கோழைத்தனம் சரிசெய்யவே முடியாதது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவனைப் பத்திரமாக இருக்கும்படி குலைந்த தொனியில் வேண்டிக்கொண்டு நான் வெளியே கிளம்பினேன். இந்த பயந்த மனிதன் என்னை அவமானத்துக்கு உள்ளாக்கினான். வின்சென்ட் மூன் அன்றி ஏதோ நான்தான் கோழை என்பதுபோல. ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும், அது எல்லா மனிதர்களும் செய்ததைப்போலத்தான். அதனால்தான் தோட்டத்தில் இழைக்கப்பட்ட கீழ்ப்படியாமை என்ற ஒற்றைச் செயல்  ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கறைபடுத்தும் என்பது நியாயமில்லை என்று ஆகிவிடாது; அதானாலேயே, மனிதகுலத்தைக் காப்பாற்ற, ஒரு ஒற்றை யூதனை சிலுவையில் அறைவது சரியில்லை என்று ஆகிவிடாது. ஒருவேளை ஷோப்பன்ஹவரின் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா மனிதர்களும், எந்த மனிதனும் எல்லா மனிதனே, ஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.

ஜெனரலின் பிரம்மாண்டமான வீட்டில் ஒன்பது நாட்கள் கழிந்தன. போரின் அவசங்களையும் வெற்றிகளையும்பற்றி நான் பேசப்போவதில்லை: என்னை அவமானப்படுத்தும் அந்த வடுவின் வரலாற்றைக் கூற முற்படுகிறேன். என் ஞாபகத்தில் அந்த ஒன்பது நாட்கள், கடைசி நாளின் முந்திய தினத்தைத் தவிர, ஒரே நாளாகத்தான் இருக்கிறது. அன்று எங்கள் ஆட்கள் ராணுவக் குடியிருப்புக்களில் நுழைந்தனர். எல்ஃபின் என்ற இடத்தில் யந்திரத் துப்பாக்கிகளுக்கு இறையாகிப் போன எங்கள் பதினாறு தோழர்களுக்கு ஈடாக மிகச்சரியாக வஞ்சம் தீர்க்க முடிந்தது அன்று. விடியற்காலையின் குழப்பத்தில், காலை உதிக்கும் முன்னர் நான் வீட்டிலிருந்து வெளியேறினேன். இரவு கவியும் சமயத்தில் திரும்பினேன். மேல் மாடியில் என் தோழன் எனக்காகக் காத்திருந்தான்: அவனது காயம் அவனை வீட்டின் கீழ்ப்பகுதிக்கு இறங்க அனுமதிக்கவில்லை. எஃப்.என்.மாட் என்பவரோ அல்லது க்ளாஸ்விட்ஸ் என்பவரோ எழுதிய யுத்த தந்திரம்பற்றிய தொகுதி ஒன்றை அவன் கையில் வைத்திருந்தது என் நினைவுக்கு வருகிறது. “தரைப்படையே எனக்குப்பிடித்த ஆயுதம்” என்று ஒரு இரவு என்னிடம் மனம் திறந்து கூறினான். எங்களுடைய திட்டங்களைப் பற்றி விசாரித்தான்: அவற்றை விமர்சிக்கவோ அல்லது மாற்றவோ விரும்பினான். “நமது படுமோசமான பொருளாதார அடிப்படையை” அவன் கண்டிக்கப் பழகியிருந்தான். வறட்டு கொள்கைக்காரனாகவும் கலகலப்பற்றவனாகவும் இருந்த அவன், ஒரு அழிவிற்கான முடிவை முன்னறிவித்தான். “அது ஒரு கொழுந்துவிட்டு எரியும் விவகாரம்” என்று முணுமுணுத்தான். உடல் அளவில் அவன் ஒரு கோழை என்பதை அசட்டை செய்ய வேண்டி அவனின் மன ஆணவத்தைப் பெரிதாக்கிக் காட்டினான். நல்லதற்கோ, கெட்டதற்கோ, இவ்வாறு ஒன்பது நாட்கள் கழிந்தன.

பத்தாவது நாள் நகரம் இறுதியாக ‘பிளாக் அன் டேன்ஸ்’ வீரர்களிடம் சிக்கியது. உயரமான, மௌனமான குதிரை வீரர்கள் சாலையில் திரிந்து கண்காணித்தார்கள். சாம்பலும் புகையும் காற்றில் மிதந்தன: ஒரு சதுக்கத்தின் மையத்தில் வீரர்கள் தங்கள் குறிக்கூர்மையை முடிவற்று பயிற்சி செய்துகொண்டிருந்த ஒரு போலி மனித உருவைவிட மெலிதான மனப்பதிவே இருக்கக்கூடிய அளவில், தரையின் ஒரு மூலையில் மனிதச் சடலம் வீசப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தேன். வானில் விடியல் தெரியும் நேரம் நான் கிளம்பினேன்: மதியத்திற்கு முன் நான் திரும்பிவிட்டேன். நூலகத்தில் மூன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்; அவன் குரலின் தொனி அவன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிவித்தது. பிறகு என் பெயர் காதில் விழுந்தது; பிறகு நான் ஏழு மணிக்குத் திரும்புவேன் என்பதும், பிறகு நான் தோட்டத்தைக் கடந்து வரும்போது அவர்கள் என்னைக் கைதுசெய்யவேண்டும் என்ற குறிப்புணர்த்தலும். என்னுடைய நியாயமான நண்பன் என்னை நியாயமான வகையில் விற்றுக்கொண்டிருந்தான். அவனுக்கு தன் சுயபாதுகாப்பு பற்றிய உறுதி தரவேண்டும் என்று கேட்டதும் என் காதில் விழுந்தது . “இந்த இடத்தில் என் கதை குழப்பமடைந்து சரடு அறுகிறது. மயக்கமடையச் செய்யும் ஆழ்ந்த படிக்கட்டுகள் வழியாகவும், பயம் கொள்ளத் தகுந்த கூடங்கள் வழியாகவும் என்னைக் காட்டிக் கொடுத்தவனைப் பின் தொடர்ந்தேன் என்பது எனக்குத் தெரியும். மூன் அந்த வீட்டை மிக நன்றாக, என்னைவிட நன்றாகத் தெரிந்துவைத்திருந்தான். ஒன்று அல்லது இரண்டு தடவைகள் நான் அவனைத் தவறவிட்டேன். வீரர்கள் என்னை நிறுத்துவதற்கு முன்பு அவனை மடக்கினேன். ஜெனரலின் ஆயுதச் சேகரிப்புக்களில் ஒரு வளைந்த குறுவாளைப் பிடுங்கி எடுத்தேன். அந்த அரைச் சந்திரனால் அவனுடைய முகத்தின் மேல் என்றென்றைக்குமாக ரத்தத்தினால் ஆகிய அரைச்சந்திரனைச் செதுக்கினேன்.”

“போர்ஹெஸ், ஒரு அந்நியரான உங்களிடம் இந்த மனத்திறப்பினைச் செய்திருக்கிறேன். உங்களின் வெறுப்பு அவ்வளவாய் என்னை வருந்தச் செய்ய முடியாது. “இங்கு கதை சொன்னவன் நிறுத்தினான். அவன் கைகள் நடுங்குவதை நான் கவனித்தேன். “அப்புறம் அந்த மூன்?” நான் கேட்டேன் “அவன் காட்டிக் கொடுத்துப் பெற்ற பணத்தை எடுத்துக் கொண்டு பிரேஸீலுக்கு ஓடிவிட்டான். அந்த மதியம், சதுக்கத்தில் ஒரு போலி மனித உரு சில குடிகாரர்களால் சுட்டு வீழ்த்தப்படுவதை அவன் பார்த்தான் “நான் பலனின்றி மீதிக் கதைக்காகக் காத்திருந்தேன். இறுதியில் அவனை தொடர்ந்து சொல்லச் சொன்னேன்.

அப்பொழுது ஒரு கேவல் அவன் உடம்பை உலுக்கியது: ஒரு பலவீனமான மென்மையுடன் அவனது வளைந்த வெண்ணிற வடுவைச் சுட்டிக் காட்டினான்.”நீங்கள் நம்பவில்லையா?”அவன் திக்கினான். “என் முகத்தின் மீது பெரும் பாதகத்தின் குறி எழுதப்பட்டு நான் அதைச் சுமந்து திரிவதை நீங்கள் பார்க்கவில்லையா? கதையின் இறுதிவரை நீங்கள் கேட்கவேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு கூறினேன். என்னைப் பாதுகாத்தவனைப் புறக்கணித்தேன் நான். நான்தான் வின்சென்ட் மூன், இப்பொழுது என்னைப் பழியுங்கள்.”

நன்றி: மீட்சி 2 செப்டம்பர் 1983


 ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் (1899 – 1986)

1971 ஆம் ஆண்டு International Publishers Prizeஐ Samuel Beckett உடன் பகிர்ந்து கொண்டார்.

தமிழில் முதன்முதலில் போர்ஹேயின் Circular Ruins சிறுகதையை வட்டச் சிதைவுகள் என்று மொழிபெயர்த்தவர் தர்மூ அரூப் சீவராம் (பிரமிள்). அதை 9ஆவது இதழில் ஜூன் 1971ல் வெளியிட்டது ‘கசடதபற’.

The Greatest living writer in the Spanish language today என்று Time பத்திரிகை அவரைப்பற்றி எழுதியிருக்கிறது.


புனைவு என்னும் புதிர் கட்டுரை – உலகச் சிறுகதைகள் 12

விமலாதித்த மாமல்லன்

கண்டவன்களும் தங்களைத் தாங்களே மாஸ்டர் என்று சொல்லிக்கொண்டு திரிகிற இன்றைய வெட்கங்கெட்ட தமிழ்ச் சூழலில், உலக இலக்கியத்தின் உண்மையான மாஸ்டர்களைத் தெரிந்துகொள்வது எப்போதையும் விட அவசியமாகிறது.

எதைப் படித்தாலும் ஆரம்ப வரிகளிலேயே, அல்லது ஓரிரு வார்த்தைகள், ஒரு வாக்கியத்தை வைத்துக்கொண்டே ஆகா ஓகோவென புல்லரித்து சிலிர்த்துக்கொள்வதென்பது, முகர ஆரம்பிக்கும்போதே வடிந்துவிடுவதற்கு ஒப்பானது. இது அல்ல இலக்கிய வாசிப்பு. முதிரா சிறுவர்களுக்குரிய இந்தப் பிரச்சனையுடன் நுனிப்புல் மேய்ந்தபடி திரிந்துகொண்டு விசிலடிக்கிற பெரும்பான்மை, நடுத்தர வயது தடிமாடுகளாக இருக்கின்றன என்பதுதான் நகைப்புக்குரிய, வேதனைக்குரிய விஷயம்.

உண்மையான வாசிப்பு என்ன செய்யும். யோசிக்கவைக்கும். யோசனை நிதானப்படுத்தும். யோசனை திரண்டு ஆழமாகவும் ஆகும்போது, சிந்திக்கத் தூண்டுகிறது. கும்பல் – சிந்திப்பதில்லை; சொல்பேச்சைக் கேட்டு, வீசப்பட்ட வார்த்தைகளைப் பொறுக்கிக்கொண்டு, கொக்கரித்துக்  கும்மியடித்து பொழுதைக் கடத்திக்கொண்டிருக்கும். சிந்தனை, கும்பலில் இருந்து விலக்கித் தனிமைப்படுத்துகிறது. மனதை சமநிலைப் படுத்துகிறது. சந்தோஷத்தில் தாண்டிக் குதிக்காமலும் சங்கடத்தில் உடைந்துவிடாமலும் இருக்கிற மன உறுதியைக் கொடுக்கிறது. சமநிலை பேணுகிற மனம், எதையும் சீர்தூக்கிப் பார்க்கிறவிதமாகப் பக்குப்படுகிறது. எனவேதான் சுயமாக சிந்திப்பவனும் சுயமரியாதை உள்ளவனும் ஒருபோதும் கும்பலில் சேர்வதுமில்லை; கும்பலைச் சேர்ப்பதுமில்லை.

தமிழில், வித்தியாசமான எழுத்து என்பது, நேரடி இறக்குமதியாக இளிக்கிறது அல்லது உத்திகளை அரைகுறையாயாய் புரிந்துகொண்டு, சொந்த அனுபவமற்று, உள்ளூர் சரக்கை வைத்து வெளிநாட்டைப் ‘போலச் செய்து’ வித்தைகாட்டுவதாக மட்டுமே நின்றுவிடுகிறது.

போர்ஹேவிடம் மாயம் மந்திரம் இருக்கிறது என்று, அதைப்போல எழுதி சாதிக்கப்போகிறேன் என்று தொடங்கி, மையில்லாத மெஷினில் நகலெடுப்பதில் முடிந்து, சொந்தமாக இருந்த கொஞ்சநஞ்சத்துக்கும் பில்லி சூனியம் வைத்துக்கொண்டவர்களே தமிழில் நிறைய.

தேவையே, அனைத்தையும் தீர்மானிப்பதைப்போல – இலக்கியத்திலும் செயல்படுகிறது. வழக்கமான சொல்முறை, சொல்ல வருகிற விஷயத்திற்குப் போதவில்லை என்பதால் புதியமுறைகளைக் கைக்கொண்ட கதைகள் மட்டுமே வெற்றிபெறுகின்றன. ‘வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கிறது’ என்கிற சலுகையில் பிழைத்துக் கிடப்பவற்றால் வெற்றிபெற்றதைப்போல மினுக்கிக்கொள்ள மட்டுமே முடியும்.

1400 வார்த்தைகள் கொண்ட – கதைக்குள் கதையாக இருக்கிற கதையில் – பிரதான கதையைச் சொல்பவனைப்பற்றிச் சொல்வதற்கான பீடிகையைச் சொல்ல, மூன்றிலொரு பங்கை எடுத்துக்கொள்கிறார் கதைசொல்லி என்றால், மீதி முழுக்கவும் கதைக்குள்ளே வருகிற கதைசொல்லியான ஆங்கிலேயன் என குறிப்பிடப்படுகிறவன், வின்செண்ட் மூன் என்பவனைப்பற்றிச் சொல்வதாக இருக்கிற வடிவத்தைக் கொண்டிருக்கிறது கதை.

நேராக வந்து இதைப் படித்துவிட்டுக் கதையைப் படித்ததாய் ஒப்பேற்றி தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்கள் உருப்படவே மாட்டார்கள். எனவே, குழப்புவதைப்போல முதலில் தோன்றினாலும் பொறுமையாகக் கதையைப் படித்துவிட்டு இங்கே வாருங்கள்.

முதன்மையாக, முகத்தை வைத்துதான் மனிதர்களை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். வித்தியாசமாக இருக்கிற அம்சமே கவனத்தைக் கவரும். அதிலும் முகத்தில் பிரதானமாக இருக்கிற வடு, எப்படி வந்திருக்கும் என்கிற குறுகுறுப்பு தூங்கவிடாது.

அதில்தான் கதை தொடங்குகிறது. முகத்து வடுவோடு, பெயரற்ற அவனது இயல்பும் நடவடிக்கைகளும் பின்னணியும் என அவனைப்பற்றிய அனைத்தையுமே போர்ஹே மர்மமாக வைப்பதன் மூலம், தெரிந்துகொள்ள கதைசொல்லிக்கு ஏற்படுகிற ஆர்வத்தை உண்டாக்கி, ஆங்கிலேயனோடு நெருங்கவைத்து கதையை இயல்பாக்குகிறார்.

கதையை எழுதுவதில் கவனம் செலுத்துவதைப்போலவே, அந்தக் கதையின் பின்னணியைச் சொல்வதும் இயல்பாக இருந்தால்தான் நம்பகத்தன்மை கிடைக்கும் என்பதால் அதிலும் கவனமாக இருக்கவேண்டும். ‘கனமான’ கதை இருந்தால் மட்டும் போதாது அது எப்படிச் சொல்லப்படுகிறது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

அந்த ‘வடு’ எப்படி வந்தது என்பதுதான் கதையே என்றாலும் அதை அவன்தான் சொல்லமுடியும் என்பதால் அவனைச் சொல்லவைப்பதற்கான இணக்கமான சூழலை உருவாக்குகிறார்.

வின்செண்ட் மூன் என்பவனை அவன் சந்திக்க நேர்ந்ததைப் பற்றியும் அவனுடன் இணைந்து செயலாற்றியதைப்பற்றியும் அயர்லாந்தின் சுதந்திரப் போராடப் பின்னணியில் விரிவாகச் சொல்கிறான் ‘ஆங்கிலேயன்’.

வின்செண்ட் மூன் எப்பேர்ப்பட்டப் போராளி எப்படியான தத்துவப் பின்புலம் உள்ளவன் என்பதைப் பற்றியும் சொல்லிக்கொண்டே வருகையில், பைபிளில் இருந்து வின்செண்ட் மூன் பயன்படுத்திய மேற்கோள்களையும் யூதாஸ் ஏசுவைக் காட்டிக்கொடுக்கிற சம்பவத்தையும்

‘ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும், அது எல்லா மனிதர்களும் செய்ததைப்போலத்தான்.’

என்று தொடங்கி, தொடர்கிற இரண்டு வாக்கியங்களும்

‘அதனால்தான் தோட்டத்தில் இழைக்கப்பட்ட கீழ்ப்படியாமை என்ற ஒற்றைச் செயல்  ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கறைபடுத்தும் என்பது நியாயமில்லை என்று ஆகிவிடாது; அதானாலேயே, மனிதகுலத்தைக் காப்பாற்ற, ஒரு ஒற்றை யூதனை சிலுவையில் அறைவது நியாயமில்லை என்று ஆகிவிடாது.’

ஒரே மாதிரியான கட்டமைப்பிலும் இரட்டை எதிர்மறைகளைக் கொண்டும் இருப்பதைக் கவனியுங்கள். டபுள் நெகட்டிவ் பாஸிடிவ் பொருளைத்தான் தரும்.

திடீரென இப்படியொரு தத்துவப் பேச்சை இடையில் செருகுவதற்கான நியாயத்தைத் தர்க்கரீதியாக நம்பகத்தன்மையைக் கொடுக்கும்விதமாகக் கிட்டத்தட்ட 350 வார்த்தைகளுக்கு முன்பாக வின்செண்ட் மூன் எப்படிப்பட்டவன் என்பதை விவரிக்கும்போதே,

‘அவன் தீவிரத்துடனும், தற்பெருமையுடனும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்திருந்தான். கடவுளுக்குத்தான் தெரியும் என்னவிதமான கம்யூனிஸ்ட் புத்தகங்கள் என்று. எவ்விதமான விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அவன் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தைப் பயன்படுத்தினான். ஒருவன் மற்ற மனிதனை வெறுப்பதற்கு அல்லது விரும்புவதற்கு எல்லையற்ற காரணங்கள் கொண்டிருக்கலாம்: மூன் பிரபஞ்சத்தின் வரலாற்றையே ஒரு மிக மோசமான பொருளாதார முரண்பாட்டுக்கு சுருக்கினான். புரட்சியானது வெற்றி அடையும்படி முன் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூறினான்.’

என்று விதைத்து வைக்கிறார் போர்ஹே.

எழுத்து மனக்கொதிப்பில் பித்து நிலையில் உருவாவதாக அடித்துவிட்டுக் கொள்வதெல்லாம் அரிச்சுவடி வாசகனிடம் பிம்பத்தைப் பெரிதாக்கிக்கொள்ள மட்டுமே பயன்படுமேயன்றி, இதுபோன்ற உலகத்தரமான உயர்ந்த எழுத்தைப் படைக்க ஒருபோதும் உதவாது.

பைபிளிலிருந்து வாக்கியங்களையும் சம்பவங்களையும் எடுத்தாள்வதுகூட, பின்னால் வரவிருக்கிற, வின்செண்ட் மூன் செய்யவிருக்கிற அவமானகரமான காட்டிக்கொடுக்கிற காரியத்திற்கான முன்னெடுப்பே.

ஒரு கதைக்குள் போர்ஹே என்னென்னவோ சொல்கிறார். ஆனால் ஒரு வார்த்தையைக்கூட வீணாகச் சொல்லிவைக்கவில்லை. என்னென்ன செய்கிறார் எப்படிச் செய்கிறார் என்பதையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து பக்கம்பக்கமாக விதந்தோதிக்கொண்டே போகலாம். ஆனால் கோடிகாட்டுவதைப் பிடித்துக்கொண்டு தானாகத் தேடிப்பார்த்து ரசிக்கப் பழகிக்கொண்டால்தான் ஒட்டும். எல்லாவற்றையும் எவனாவது சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று வாய் பார்த்து உட்கார்ந்திருந்தால் இருக்கிற இடத்தைவிட்டு எழுந்திருக்கவேமாட்டோம்.

ஏன் இந்தக் கதையை நேரடியாகச் சொல்லாமல் இப்படிச் சுற்றிவளைத்துச் சொல்லி வைத்தியிருக்கிறார் போர்ஹே என்பதற்கான எளிய நியாயம், எவனாலுமே அவன் செய்த அவமானகரமான காரியத்தை ஒப்புக்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதால்கூட இருக்கலாம்.

இன்னொருவனைப் பற்றிச் சொல்வதைப்போல இருக்கிற கதையின் கடைசி வரியில், இது அவனது வாக்குமூலம் என்பது தெரியவருகிறது. எல்லோருக்குமே, பாரத்தை எங்காவது இறக்கிவைக்கத்தானே வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் இதை இன்னொருமுறை முறை படித்துப்பார்த்தால் அப்பேர்ப்பட்ட புரட்சிக்காரனா இப்படி நடந்துகொண்டான் என்கிற வியப்பையும் எப்பேர்ப்பட்டவனும் நெருக்கடியில் எப்படிவேண்டுமானாலும் நடந்துகொள்ளக்கூடும், இதுதான் இப்படித்தான் என்று மனிதவாழ்வில் எதுவுமே இல்லை என்கிற தெளிவிற்கும் அமைதிக்கும் நம்மை கொண்டுசெல்லக்கூடும்.

இத்துடன், இடையில் வருகிற யூதாஸ் – ஏசு பற்றிய இரண்டு வாக்கியங்களையும் இணைத்துப் பார்த்தால், போர்ஹே எவ்வளவு பெரிய மேதை என்று பேச்சற்று பிரமித்து நிற்போம்.

*

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!