அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது. பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழுவின் இரண்டாவது கூட்டத்தின் முடிவில் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை மாற்றியமைக்கும் மிக முக்கியமான முடிவு எட்டப்பட்டது.
தேசியப் பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் (National Security Advisory Board – NSAB) தலைவராக அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியக் காவல்பணி அதிகாரியாக 1976ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் அலோக் ஜோஷி. 2005ஆண்டு முதல் புலனாய்வு வாரியத்தில் (Intelligence Bereau) நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. 2012ஆம் ஆண்டு இந்தியாவின் அயல் உளவுப்பிரிவின் (Research and Analysis Wing – RAW) தலைவராக நியமிக்கப்பட்டார். 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை தேசியத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் ( National Technical Research Organization – NTRO) தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
NSAB அமைப்பில் ஆறு புதிய உறுப்பினர்களையும் மாற்றியமைத்திருக்கிறது மத்திய அரசு. ஓய்வுபெற்ற மேற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பிஎம் சின்ஹா, முன்னாள் தெற்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏகே சிங், ஓய்வுபெற்ற கடற்படை ரியர் அட்மிரல் மாண்டி கன்னா, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதர் வெங்கடேஷ் வர்மா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜீவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் இந்த அமைப்பின் உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றிருக்கின்றனர். இந்த முடிவு தேசப்பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளின் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
Add Comment