உலகெங்கும் போரும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையும் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு நாட்டின் பாதுகாப்பு அந்நாட்டின் உளவுத்துறையை மட்டுமன்றி அதன் நட்புறவு நாடுகளின் உளவுத்திறனையும் சார்ந்து இருக்கும் வகையில்தான் என்றுமே புவிசார் அரசியல் களம் இருந்து வருகிறது.
அவ்வாறு செயல்படும் உலகின் மிகப் பழமையான, முக்கியமான உளவுத்துறைக் கூட்டணி அமைப்பின் பெயர் Five Eyes என்பதாகும். இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐந்தும் உறுப்பு நாடுகள். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்பும், 1946ஆம் ஆண்டு, அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் உளவுத்துறை ஒத்துழைப்புக் கூட்டணியைத் தொடர்வது என்று முடிவெடுத்தன. 1948ஆம் ஆண்டு கனடாவும், 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தும் அதில் இணைந்தன.
Five Eyes நாடுகளுக்கு இடையே உள்ள உளவு ஒப்பந்தமானது மிக நெருக்கமாகவும் மிகப் பரந்த அளவிலும் ஒருங்கிணைந்த முறையில் உளவுச் செய்தி பரிமாற்றத்திற்கு வழிவகை செய்கிறது. இந்நாடுகள் மிகவும் உணர்திறன் வாய்ந்த இரகசிய உளவு சமிக்ஞைகள் மற்றும் மனித உளவுத் தரவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. சீனாவைப் பற்றிய உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதற்கான மிக முக்கியமான தளம் மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பைன் கேப் (Pine Gap) செயற்கைக்கோள் நிலையம். இது அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ (CIA) தலைமையில் இயங்குகிறது. இது இந்நாடுகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உளவுத்துறை உறவுக்கு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.
Add Comment