“எனது எதிர்காலம் ஸ்ரீரங்கத்தில்தான். எனது இஷ்ட தெய்வமான ராமனையும் ஷேத்ரமூர்த்தியான ரங்கநாதரையும் வழிபட்டுக் கொண்டே என் கலையை வளர்ப்பேன்” என்று வந்து சேர்ந்தான் அந்த இளைஞன். அவனுடைய பெற்றோர்களுக்கு முதலில் சிறிது தயக்கம் இருந்தாலும் குறுக்கே நிற்கவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்வது அவ்வளவு சுலபமான முடிவல்ல அந்தக் காலக்கட்டத்தில். ஸ்ரீரங்கத்திற்கு வந்ததோடு நிற்கவில்லை. தான் வளர்ந்ததும் சாரதா நாதஸ்வரச் சங்கீத ஆசிரமம் என்ற ஒன்றையும் காவிரிக்கரையில் ஸ்தாபித்தார். அதன் மூலம் கற்க ஆர்வமும் துடிப்பும் உள்ள மாணவர்களுக்குத் தனது கலையைக் கற்பிக்கத் தொடங்கினார். அவர்தான் நாதஸ்வர வித்வான் சங்கீத கலா நிதி ஷேக் சின்ன மௌலானா.
மௌலானாவுக்கு இது நூற்றாண்டுக் கொண்டாட்ட நேரம்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த கரவடி என்ற ஊரில் மே 12 1924-இல் பிறந்தவர் ஷேக் சின்ன மௌலானா. சிறு வயதில் இருந்தே நாதஸ்வரத்தின் மீது அபார ஆர்வம். அவரது முன்னோர்களும் இந்தக் கலையில் தேர்ந்தவர்கள்தான். இஸ்லாமியர்களாக இருந்தாலும் அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மையான இந்துக் கோயில்கள் அனைத்திலும் மங்கல இசை ஒலிக்க இவர்களைத்தான் அழைப்பது வழக்கம். ‘மதம் எங்கே இங்கே வந்தது. இறைவனுக்குத் தேவை இசை. அது எப்படி வருகிறது என்பது தான் முக்கியமே தவிர யாரின் மூலம் வருகிறது என்பதல்ல’ என்று சொல்வார் அவர் தந்தை ஷேக் காசிம் சாகிப். இசைதான் எனது மதம் என்பது சின்ன மௌலானாவின் கருத்து.
Add Comment