Home » இனி இல்லை இந்தத் திரை – 1
வெள்ளித்திரை

இனி இல்லை இந்தத் திரை – 1

உதயம்: சில நினைவுகள்

சென்னை உதயம் திரையரங்கம் மூடப்படுகிறது என்ற செய்தி அறிந்து சிறிது வருத்தமாக இருந்தது. இப்போது தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதில்லை என்றாலும், பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் திரையரங்கில்தான் அதிகமான படங்களைப் பார்த்திருக்கிறேன்.

உதயத்தில் நான் பார்த்த முதல் திரைப்படம் புது வசந்தம். 1990 ஆம் வருடத் தமிழ்ப் புத்தாண்டுக்கு அந்தப் படம் வெளியானது. அப்போது ஊர் சுற்றலையெல்லாம் நிறுத்திக்கொண்டு முதல் முதலாக அமுதசுரபியில் வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் யதார்த்தவாதியாக முயற்சி செய்துகொண்டிருந்தேன். கையில் சிறிது காசுப் புழக்கம் இருந்தது. பெரிய கற்பனைகளுக்கு இடமில்லை. நாநூறு ரூபாய் சம்பளம். அதில் என் செலவுக்குப் பதினைந்து அல்லது இருபது ரூபாய் எடுத்துக்கொள்வது வழக்கம். செலவு செய்யவே தோன்றாது. அப்பா காசில் வாழ்ந்துகொண்டிருந்தவரை நான் அப்படி இல்லை என்பதை விழிப்புடன் கவனித்து உணர்ந்ததுதான் அன்றைய தேதியில் அடைந்த ஞானம். ஊரே பாராட்டுகிறதே, அப்படி என்னதான் இருக்கிறது பார்க்கலாம் என்று அந்தப் படத்துக்குப் போனேன்.

உதயத்தில் அப்போது மினி உதயம் கிடையாது. சூரியன் இருந்தது. சந்திரன் உருவாகிக்கொண்டிருந்த நினைவு. அட்வான்ஸ் புக்கிங் வசதிகள் இல்லாத காலம் என்பதால் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கித்தான் உள்ளே செல்ல முடியும். அரங்கு நல்ல பிரம்மாண்டமாக, குளுகுளுவென்றிருந்தது. அன்று நானறிந்ததெல்லாம் குரோம்பேட்டை வெற்றி, பல்லாவரம் லட்சுமி, தேவி, ஆலந்தூர் ராமகிருஷ்ணா, பறங்கிமலை ஜோதி மட்டுமே. இவை ஓலைக் கொட்டகைத் திரையரங்குகள் இல்லை என்றாலும் அந்த வகையில்தான் வரிசைப்படுத்த வேண்டும். லட்சுமியில் ஒரு சமயம் அனகோண்டா படம் பார்க்கப் போனபோது, அந்தப் படம் பிடிக்காத யாரோ ஒருவர் பாய்ந்து சென்று திரையைக் கிழித்துவிட்டு வெளியே ஓடிப் போனார். அந்தச் சம்பவம் நடந்ததற்கு ஓராண்டுக்குப் பின்னர் உள்ளம் கவர்ந்த கள்வன் என்ற பாண்டியராஜன் படம் பார்க்கச் சென்றபோது, அனகோண்டா பிடிக்காத மனிதர் கிழித்த திரை அப்படியே இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

தவிர, இந்த எந்த தியேட்டரிலும் அப்போது ஏசி இருக்காது. தவறிப் போய்ப் பகல் காட்சிக்குச் சென்றுவிட்டால் சிதையில் இருந்துவிட்டுத் திரும்புவது போலத்தான் இருக்கும். உதயம் எனக்கு முதல் முதலாக ஏசியை அறிமுகம் செய்தது. அந்த அரங்கில் எந்தப் படத்தைப் பார்த்தாலுமே நல்ல படம் என்று தோன்றிவிடும் போலிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இப்படியெல்லாம் வாரம் இரண்டு படம் பார்த்துவிட்டு, மற்றவர்கள் வார வாரம் ஓரிரு படங்களுக்குப் போவதைப் பார்த்து பொறாமை கொள்வதெல்லாம் சரியா?

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!