இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
வணக்கம்
இந்த இதழ் சென்னை புத்தகக் காட்சி 2023ஐ வரவேற்கும் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. 2020ல் புத்தகக் காட்சியைப் பெருந்தொற்று கொள்ளை கொண்டது. அடுத்த இரு வருடங்களும் சிறிது அச்சத்துடனேயே கடந்ததை நினைவுகூர்ந்தால், வரவிருக்கும் புத்தகக் காட்சி வாசகர்களுக்கு எவ்வளவு பெரிய மன எழுச்சியையும் உற்சாகத்தையும் பரவச உணர்வையும் தரும் என்பது புரியும்.
இந்த ஆண்டு மூன்று நாள் சர்வதேசப் புத்தகக் காட்சி நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனை நாம் ஒரு சிறப்பான தொடக்கமாகக் கருத வேண்டும். ஏராளமான வாசகர்கள், கோடிக்கணக்கில் விற்பனை என்று ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சியின் வீச்சு பெருகிக்கொண்டிருந்தாலும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு எப்போதும் தீர்வு இருந்ததில்லை.
உதாரணமாகக் கழிப்பிடம். புத்தகக் காட்சிக்கு வருவோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அது அமைக்கப்படுவதில்லை. அமைக்கப்படும் கழிப்பிடத்திலும் சுகாதாரம் பேணப்படுவதில்லை. புத்தகக் காட்சிக்கு வருகிற பெண்களும் முதியோரும் இதனால் படுகிற பாடு சிறிதல்ல. கழிப்பிடம் என்பது அவசரத்துக்கு ஒதுங்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் சென்னை புத்தகக் காட்சியில் சுற்றும் ஒருவர் குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்தால் மட்டுமே கழிப்பிடத்தை அடைய முடியும் என்பதே இவ்வளவு கால நடைமுறை.
மலை முகட்டிலும் கடல் அடியிலும் எங்கள் நெட் ஒர்க் வேலை செய்யும் என்று மொபைல் நிறுவனங்கள் தொண்டை கிழியக் கூவுகின்றன. ஆனால் எந்த வருடமும் புத்தகக் காட்சி மைதானத்தில் மட்டும் தொலைபேசிகள் வேலை செய்யாது. கடனட்டை இயந்திரங்கள் இயங்காது. அத்தனை பெரிய கூட்டத்துக்கு அப்படித்தான் ஆகும் என்பதெல்லாம் அபத்தமான சமாதானங்கள். பல கோடிக் கணக்கில் வணிகம் நடைபெறும் ஓரிடத்துக்கு ஒரு தாற்காலிக மொபைல் டவர் கொண்டு வர முடியாதா?
சென்னையில் உலகத் தரத்தில் ஒரு வர்த்தக மைய வளாகம் இருப்பினும் புத்தகக் காட்சியை மட்டும் கவனமாக ஏதேனும் பள்ளி அல்லது கல்லூரி மைதானத்தில்தான் நடத்துவார்கள். கேட்டால், அங்கேதான் செலவு குறைவு என்பார்கள். மைதானம் கூடாது என்பதல்ல. பேருந்து நிறுத்தம் ஒரு மூலை. வாகன நிறுத்தம் ஒரு மூலை. கண்காட்சி வளாகம் வேறு மூலை. சென்னை மக்களுக்கு நடைப்பயிற்சி தருவதா நோக்கம்? வளாகத்தை நெருங்கும்போதே தளர்ந்து போய் அமர்ந்துவிடுவோரே மிகுதி. தமிழைப் பொறுத்தவரை நாற்பது வயதுக்கு மேற்பட்டோரே பெரும்பான்மை வாசகர்கள். அவர்களை வெளிவாசல் பந்தலிலேயே சொற்பொழிவு கேட்டுக்கொண்டு ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு உள்ளே புத்தகக் காட்சி நடத்தி என்ன பயன்?
இந்த ஆண்டு தமிழக அரசு முன்னெடுக்கும் சர்வதேசப் புத்தகக் காட்சி இந்தப் பிசிறுகளையும் இத்தகைய இதர பிசிறுகளையும் களைந்த சிறப்பான வாசக அனுபவத்தைத் தரும் என்று நம்புவோம்.
இந்த இதழில் எழுத்தாளர்கள் செந்தூரம் ஜெகதீஷ், வாசு முருகவேல், நர்மி ஆகியோர் சென்னை புத்தகக் காட்சி சார்ந்த தமது நினைவுகளைக் கோத்திருக்கிறார்கள். சர்வதேசப் புத்தகக் காட்சி என்றால் எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டும் என்று ஆழி செந்தில்நாதன் தமது அனுபவத்தின் அடிப்படையில் விரிவாகப் பேசியிருக்கிறார். சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகவிருக்கும் மெட்ராஸ் பேப்பரின் நூல்கள் குறித்த விரிவான கட்டுரையொன்று தனியே இடம்பெற்றுள்ளது. இவை தவிர புத்தகக் காட்சியின் பல்வேறு அம்சங்களைத் தொட்டுப் பேசும் பிற கட்டுரைகள் அனைத்துமே உங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னையின் கலாசார அடையாளங்களுள் ஒன்றான இந்தப் புத்தகக் காட்சியை வரவேற்கும் முகமாகவே இந்த இதழின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. இனி வரும் இதழ்களிலும் புத்தகக் காட்சிப் பக்கங்கள் இடம்பெறும்.
சிறப்புப் பகுதி: சென்னை புத்தகக் காட்சி 2023
சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும்
உள்ளும் புறமும்
“நாங்கள் மீண்டும் உக்ரைனுடன் இணைவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. எங்களைக் காப்பாற்ற இங்கு யாரும் வருவதில்லை” என்கிறார் கெர்சோன்...
பழனி அருகிலுள்ள கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சித்தர் மிகப்பிரபலம். தமிழகம் முழுவதிலுமிருந்து அவரைக்காண பக்தர்கள் வருவதுண்டு. வரும் பக்தர்களிடத்தில்...
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம்...
திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி கிளைவ்ஸ் விடுதியில் மாணவர்கள் தடியடி பட்டதை தமிழ்நாட்டில் யாரும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். 25 வருடங்கள் முன்...
தொடரும்
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...
3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...