தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
வணக்கம்
இந்த இதழ் சென்னை புத்தகக் காட்சி 2023ஐ வரவேற்கும் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. 2020ல் புத்தகக் காட்சியைப் பெருந்தொற்று கொள்ளை கொண்டது. அடுத்த இரு வருடங்களும் சிறிது அச்சத்துடனேயே கடந்ததை நினைவுகூர்ந்தால், வரவிருக்கும் புத்தகக் காட்சி வாசகர்களுக்கு எவ்வளவு பெரிய மன எழுச்சியையும் உற்சாகத்தையும் பரவச உணர்வையும் தரும் என்பது புரியும்.
இந்த ஆண்டு மூன்று நாள் சர்வதேசப் புத்தகக் காட்சி நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனை நாம் ஒரு சிறப்பான தொடக்கமாகக் கருத வேண்டும். ஏராளமான வாசகர்கள், கோடிக்கணக்கில் விற்பனை என்று ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சியின் வீச்சு பெருகிக்கொண்டிருந்தாலும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு எப்போதும் தீர்வு இருந்ததில்லை.
உதாரணமாகக் கழிப்பிடம். புத்தகக் காட்சிக்கு வருவோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அது அமைக்கப்படுவதில்லை. அமைக்கப்படும் கழிப்பிடத்திலும் சுகாதாரம் பேணப்படுவதில்லை. புத்தகக் காட்சிக்கு வருகிற பெண்களும் முதியோரும் இதனால் படுகிற பாடு சிறிதல்ல. கழிப்பிடம் என்பது அவசரத்துக்கு ஒதுங்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் சென்னை புத்தகக் காட்சியில் சுற்றும் ஒருவர் குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்தால் மட்டுமே கழிப்பிடத்தை அடைய முடியும் என்பதே இவ்வளவு கால நடைமுறை.
மலை முகட்டிலும் கடல் அடியிலும் எங்கள் நெட் ஒர்க் வேலை செய்யும் என்று மொபைல் நிறுவனங்கள் தொண்டை கிழியக் கூவுகின்றன. ஆனால் எந்த வருடமும் புத்தகக் காட்சி மைதானத்தில் மட்டும் தொலைபேசிகள் வேலை செய்யாது. கடனட்டை இயந்திரங்கள் இயங்காது. அத்தனை பெரிய கூட்டத்துக்கு அப்படித்தான் ஆகும் என்பதெல்லாம் அபத்தமான சமாதானங்கள். பல கோடிக் கணக்கில் வணிகம் நடைபெறும் ஓரிடத்துக்கு ஒரு தாற்காலிக மொபைல் டவர் கொண்டு வர முடியாதா?
சென்னையில் உலகத் தரத்தில் ஒரு வர்த்தக மைய வளாகம் இருப்பினும் புத்தகக் காட்சியை மட்டும் கவனமாக ஏதேனும் பள்ளி அல்லது கல்லூரி மைதானத்தில்தான் நடத்துவார்கள். கேட்டால், அங்கேதான் செலவு குறைவு என்பார்கள். மைதானம் கூடாது என்பதல்ல. பேருந்து நிறுத்தம் ஒரு மூலை. வாகன நிறுத்தம் ஒரு மூலை. கண்காட்சி வளாகம் வேறு மூலை. சென்னை மக்களுக்கு நடைப்பயிற்சி தருவதா நோக்கம்? வளாகத்தை நெருங்கும்போதே தளர்ந்து போய் அமர்ந்துவிடுவோரே மிகுதி. தமிழைப் பொறுத்தவரை நாற்பது வயதுக்கு மேற்பட்டோரே பெரும்பான்மை வாசகர்கள். அவர்களை வெளிவாசல் பந்தலிலேயே சொற்பொழிவு கேட்டுக்கொண்டு ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு உள்ளே புத்தகக் காட்சி நடத்தி என்ன பயன்?
இந்த ஆண்டு தமிழக அரசு முன்னெடுக்கும் சர்வதேசப் புத்தகக் காட்சி இந்தப் பிசிறுகளையும் இத்தகைய இதர பிசிறுகளையும் களைந்த சிறப்பான வாசக அனுபவத்தைத் தரும் என்று நம்புவோம்.
இந்த இதழில் எழுத்தாளர்கள் செந்தூரம் ஜெகதீஷ், வாசு முருகவேல், நர்மி ஆகியோர் சென்னை புத்தகக் காட்சி சார்ந்த தமது நினைவுகளைக் கோத்திருக்கிறார்கள். சர்வதேசப் புத்தகக் காட்சி என்றால் எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டும் என்று ஆழி செந்தில்நாதன் தமது அனுபவத்தின் அடிப்படையில் விரிவாகப் பேசியிருக்கிறார். சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகவிருக்கும் மெட்ராஸ் பேப்பரின் நூல்கள் குறித்த விரிவான கட்டுரையொன்று தனியே இடம்பெற்றுள்ளது. இவை தவிர புத்தகக் காட்சியின் பல்வேறு அம்சங்களைத் தொட்டுப் பேசும் பிற கட்டுரைகள் அனைத்துமே உங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னையின் கலாசார அடையாளங்களுள் ஒன்றான இந்தப் புத்தகக் காட்சியை வரவேற்கும் முகமாகவே இந்த இதழின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. இனி வரும் இதழ்களிலும் புத்தகக் காட்சிப் பக்கங்கள் இடம்பெறும்.
சிறப்புப் பகுதி: சென்னை புத்தகக் காட்சி 2023
சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும்
உள்ளும் புறமும்
ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்...
உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு...
தொடரும்
97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...
101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...