Home » Home 08-02-23

வணக்கம்

ஒரு நல்ல கதை உங்களை என்ன செய்யும்? சிலிர்க்கச் செய்யலாம். பேச்சற்றுப் போகச் செய்யலாம். வாய் ஓயாமல் அதைக் குறித்துக் காண்போரிடமெல்லாம் பேசச் செய்யலாம். திரும்பத் திரும்ப எடுத்துப் படிக்கச் செய்யலாம். முகமறியாத அந்த ஆசிரியரை மானசீகத்தில் எண்ணி விழுந்து வணங்கச் செய்யுமா?

இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் ‘யூதாஸின் முகம்’ அப்படியொரு அனுபவத்தைத் தர வல்லது. போனி சேம்பர்லின் என்கிற அந்த எழுத்தாளரைக் குறித்து கூகுளில்கூட எந்த விவரமும் கிடையாது. பெயரை மட்டும் வைத்து அவர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று யூகிக்கலாமே தவிர, உண்மையிலேயே பெண்தானா என்றும் தெரியாது. எப்பேர்ப்பட்ட எழுத்து இது. எப்படி இப்படி ஒரு கதையை இவரால் எழுத முடிந்தது என்று திகைத்துத் திகைத்துத் தணிவீர்கள். படிக்க ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால், படித்துவிட்டால் ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டீர்கள். இதனை மொழிபெயர்த்து அளித்த ஆர். சிவகுமாருக்கும் இக்கதையையும் அதன் மேன்மையைச் சிலாகிக்கும் அழகான கட்டுரையையும் அளித்திருக்கும் மாமல்லனுக்கும் மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த நன்றி.

இது பிப்ரவரி அல்லவா? காதலர் தினத்தை முன்னிட்டு இரண்டு சிறப்புக் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. சரவண கார்த்திகேயனும் கோகிலா பாபுவும் அவற்றை எழுதியிருக்கிறார்கள். யார் யாரோ, என்னென்னவோ, எப்படி எப்படியோ எழுதத்தான் போகிறார்கள். ஆனால் இந்த இரு பார்வைகள்-கோணங்களின் தனித்துவம் உங்களை வெகுவாகக் கவரும்.

இந்த இதழின் மிக முக்கியமான கட்டுரை அதானி என்கிற தொழிலதிபரின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சித்திரிக்கும் ‘அதானி: மூன்றாம் இடத்திலிருந்து முட்டுச் சந்துக்கு’. ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டுவதுதான் சிரமம். சரியச் செய்வது மிக எளிது. உலகமே இன்று இந்தியாவை கவனிக்கிறது. இந்தச் சரிவின் காரணங்களை அலசிக்கொண்டிருக்கிறது. ஒன்றுமே நடவாதது போல நமது மத்திய அரசு இதனைக் கடக்கச் சொல்லலாம். ஆனால் கூடை போட்டுக் கோழியை மூடி வைப்பது போல ஒரு தேசியத் தலைக் குனிவை மறைத்து வைக்க இயலாது. நடந்த அபத்தங்களின் தொடக்கப் புள்ளி முதல் இறுதி வரை எதையும் விடாமல் அலசி ஆராய்ந்திருக்கிறார் கட்டுரையாளர் கோகிலா பாபு.

அமெரிக்க வான்வெளியில் பறந்து, வீழ்த்தப்பட்ட சீனாவின் உளவு பலூன் குறித்த பத்மா அர்விந்தின் கட்டுரை, கடலூரில் உள்ள ஓர் இடிந்த கோட்டையின் புதைந்த சரித்திரத்தைத் தேடி எடுக்கும் ஶ்ரீதேவி கண்ணனின் கட்டுரை, ஜெருசலேத்தில் உள்ள அல் அக்ஸா மசூதிக்குச் சென்று பிரச்னையை மேலும் ஊதிப் பெரிதாக்கியிருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் செயல்பாட்டை முன்வைத்து இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் இன்றைய கொதிநிலையை ஆராயும் நஸீமாவின் கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் ஊன்றிப் படிக்க ஏராளமாக உள்ளன.

இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் நமது சந்தாதாரராக்குங்கள். மேலும் சிறந்த பல கட்டுரைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

வெளி உலகம்

உள் உலகம்

மேலும் ரசிக்க

  • தொடரும்

    error: Content is protected !!