வணக்கம்
ஒரு சோதிடர் தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருந்தார். ‘நான் சென்ற மாதமே சொன்னேன், இம்மாதம் பெரும் பேரழிவு ஒன்று நடக்கப் போகிறதென்று. அப்போது யார் நம்பினீர்கள்? இப்போது துருக்கியிலும் சிரியாவிலும் பூகம்பம் தாக்கியிருக்கிறது பாருங்கள்.’
சென்ற மாதமே அவர் சொன்னதும் உண்மை. இன்று அப்படியொரு அழிவுச் சம்பவம் நடந்திருப்பதும் உண்மை. ஆனால் இத்தகு சோதிடர்கள் நல்லதாகச் சொல்லும் எதுவும் ஏன் நடப்பதில்லை என்பதுதான் புரிவதில்லை.
உண்மையில் துருக்கியும் சிரியாவும் இப்பேரழிவிலிருந்து மீள நெடுங்காலம் பிடிக்கும். குறிப்பாக, சிரியா. ஏற்கெனவே பல்லாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கும் தேசம். இப்போதும் கூட எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்று கொள்ளையடித்துப் போகிற கூட்டம்தான் செய்திகளில் முதன்மையாகக் காட்டப்படுகிறது. இந்த மாபெரும் வரலாற்றுத் துயரத்தைக் குறித்த கட்டுரை ஒன்றை இந்த இதழில் நஸீமா ரஸாக் எழுதியிருக்கிறார். படிக்கும்போதே நெஞ்சம் கனக்கச் செய்துவிடுகிறது அது.
கிட்டத்தட்ட அதே கனம். ஆனால் இது வேறு ரகம். இலங்கையை அடுத்து பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலுக்கு நெருக்கமாகச் சென்றுகொண்டிருக்கிறது. எக்காலத்திலும் மக்களை நினைத்து ஆட்சி புரியும் நபர்கள் அங்கே இருந்ததில்லை என்றாலும் இன்று நடப்பது சேகரித்து வைக்கப்பட்ட சீரழிவு என்பதைக் கூட அங்கே உணர யாருமில்லாதது பெருந்துயரம். ஸஃபார் அஹ்மதின் கட்டுரை பாகிஸ்தானின் இன்றைய நிலைமை குறித்த முழுமையான பார்வையைத் தருகிறது.
மூன்று மதங்களைச் சார்ந்த மக்கள் மிகுதியாக வசிக்கும் இலங்கையில் மும்மதத் திருமணங்களும் இந்நாள்களில் நடைபெறும் விதம் குறித்து ரும்மான் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். இதனுள்ளும் ஒரு மெல்லிய துயரத்தின் படலம் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் ஒரு நதி தன் பாதையை எந்த இண்டு இடுக்கிலும் கண்டடைந்து முன்னேறிச் சென்றுகொண்டே இருப்பது போலப் பொருளாதாரத்தை இழந்த காலத்திலும் பொருள்மிகு ஆதாரமொன்றைப் பற்றிக்கொள்ளும் அவசியத்தை இக்கட்டுரை அழகாகச் சொல்கிறது.
இவை தவிர, சிறை நூலகத் திட்டம் மதுரையில் நடைமுறைக்கு வந்திருப்பது குறித்த பாபுராஜின் கட்டுரை, அமெரிக்காவில் டேட்டிங் கலாசாரத்தின் உண்மை முகத்தை வெளிக்காட்டும் பத்மாவின் கட்டுரை, இன்று உலகெங்கும் பேசப்படும் சாட் ஜிபிடி குறித்த கோகிலாவின் கட்டுரை, சிவராத்திரியை ஒட்டி வெளியாகியுள்ள சிவசங்கரி வசந்த் மற்றும் ஶ்ரீதேவி கண்ணனின் கட்டுரைகள், மேற்சொன்ன அனைத்தையும் தூக்கி விழுங்கி வானோங்கி நிற்கும் காஃப்காவின் அதி அற்புதமானதொரு சிறுகதை, அதற்கு மாமல்லன் எழுதியிருக்கும் புனைவு என்னும் புதிர் கட்டுரை என்று இந்த இதழ் முழுதும் உங்களுக்கு விருந்துதான்.
மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரர்களாக்குங்கள். இந்தப் பத்திரிகையின் ஆதாரப் புள்ளி நீங்களே அல்லவா?